tamilnadu

img

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு கட்டணம் கேட்கும் பள்ளிகள் - பி.முருகையன்

உலகச் சுகாதாரப் பேரிடர்க் காலம் இது; கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலகமெங்கும் உயிர்களைக் கொத்துக் கொத்தாய்ப் பறிக்க உலகமே இன்று துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலை யில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை மழலையர் வகுப்பு முதலே இயங்கலை எனும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த பள்ளிகளும் அரசும் கல்வித்துறையும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது எவ்வளவு ஒரு வேடிக்கையான நிகழ்வு என எண்ணி வேதனைப்பட வைக்கிறது.

தமிழ்நாட்டில் 10ஒ10 அடிக் குடிசையில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள் எண்ணிலடங்காமல் உள்ளன. இவர்களிடத்தில் இயங்கலை, அருகலை, இணையதளம், திறன்பேசி என்கிற ஸ்மார்ட் போன் எல்லாம் உள்ளனவா  எனச் சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை யான குடும்பங்களில் இந்த வசதி இல்லை  என்பது அரசுக்குத் தெரியாதா என்ன? ஆனால் இப்படிப்பட்ட குடும்பங்களி லிருந்தும் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றுகொண்டுதான் இருக்கின்றனர். இந்தக் குழந்தைகள் எவ்வாறு இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? 

வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கல்வி கற்க முடியும்; இல்லாதவர்கள் கலவி கற்க முடியாது. கல்வியில் ஒரு சமநிலை இல்லாமல் போகும். அதற்குதான் இந்த ஆன்லைன் கல்வி வழி வகுக்கும். ஆன்லைன் வகுப்புகளை ஒரு கூடுதல் வசதி யாகப் பயன்படுத்தலாமே தவிர வகுப்ப றைக்கு மாற்றாகக் கருத முடியாது.

இரண்டொரு நாட்களுக்கு முன் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர், கொரோ னா ஊரடங்குக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாகவும் அந்த அளவு தொழில் நுட்பம் வளர்ந்திருப்பதாக வும் பெருமைப்பட்டுள்ளார். ஆனால் இந்த வசதி இல்லாத ஏழைகளைப் பற்றி அவர் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதைவிடக் கொடுமை என்னவெனில் எரிகிற கொள்ளியில் நெருப்பு எடுப்பதைப் போன்று  ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டணத்தைக் கட்டுமாறு பள்ளிகள் பெற்றோர்களை வற்புறுத்துவது நியாய மற்ற செயலாகும். 

நோய்த் தொற்றுக் காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றித் தவி த்துக் கொண்டிருக்கும்போது ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாகக் கூறிக் கட்டணம் கேட்பது நியாயமற்ற செயலாகும். கட்டணம் கட்டக் கூறினால் வகுப்புகள்தான் நடைபெறவில்லையே; பள்ளி திறந்த பிறகுக் கட்டுகிறோம் என்று கூறும் பெற்றோர்களுக்கு ஒரு சாக்காக ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாகக் கூறிப் புத்தகக் கட்டணம் கட்டுங்கள்; கல்விக்கட்டணம் கட்டுங்கள்; பேருந்துக் கட்டணம் கட்டுங்கள்; சீருடைக்கட்டணம் கட்டுங்கள்; போதாதற்கு ஆன்லைன் கட்டணம் கட்டுங்கள் என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை அரசு உடனே இரத்து செய்யவேண்டும்.